Published : 01 Feb 2023 09:27 PM
Last Updated : 01 Feb 2023 09:27 PM

பொது இடங்களில் பாலின சார்பற்ற கழிவறைகள்: தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: பொது இடங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைகளை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிப்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஃபிரெட் ரோஜர்ஸ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், "2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 22 ஆயிரத்து 364 திருநர்கள் உள்ளனர். இவர்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் வழங்கப்படாமல், அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. தங்கள் விருப்பம் போல இரு பாலருக்கான கழிப்பிட வசதிகளை தேர்வு செய்து செல்லும் போது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.

தனி கழிவறை வசதிகள் வழங்குவதன் மூலம் சமூகத்தில் இருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுகின்றனர். ஆண், பெண் கழிவறைகள் தவிர்த்து கூடுதலாக பாலின சார்பற்ற (gender neutral) கழிவறைகள் அமைப்பதன் மூலம் இவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒருவர் செல்லும் வகையில் பாலின சார்பற்ற கழிவறைகளை அமைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கெனவே ஆண் - பெண் கழிவறைகள் தவிர்த்து, மாற்றுத் திறனாளிகளுக்கும் தனி கழிப்பறைகள் இருப்பதை சுட்டிக்காட்டி அவற்றை பாலின சார்பற்ற கழிவறைகளாக அறிவிப்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x