

தன்னையும், தனது குடும்பத்தினரையும் தவறாக சித்தரித்து இழிவுபடுத்தும் யூடியூப் சேனல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைமில் நேற்று ஆன்லைன் வாயிலாக நடிகர் சரத்குமார் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கூறப்பட்டிருப்பதாவது: சில தினங்களாக இரண்டு யூடியூப் சேனல்களில் என்னை பற்றியும், எனது குடும்பத்தினரைப் பற்றியும் கலைத் துறையினரைப் பற்றியும் தவறாக சித்தரித்து இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
உண்மைக்கு புறம்பாக கற்பனை செய்திகளை தவறான நோக்கத்தில் தொடர்ந்து வீடியோவாக பதிவு செய்து வெளியிடப்பட்டு வருகிறது. எனது புகழுக்கு களங்கம் கற்பித்து தனிப்பட்ட முறையில் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்ட நபர் யாராக இருந்தாலும் கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றார்.