கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் தவறான பாதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே நாளில் 2,546 வழக்குகள்; ரூ.3.81 லட்சம் அபராதம் வசூல்

Published on

சென்னை: சென்னையில் நேற்று (ஜன.30) ஒரு நாளில் மட்டும் தவறான பாதையில் வாகனம் ஒட்டியதற்காக 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 763 வழக்குகளுக்கு அபராத தொகை ரூ.3,81,500 வசூலிக்கப்பட்டதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள தகவல்: சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் தவறான வழியில் வாகனங்களை ஓட்டுவதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது கவனிக்கப்பட்டது. இந்த விதி மீறல்களை கட்டுப்படுத்த நேற்று (30.01.2023) சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. இந்த தணிக்கையில், தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக மொத்தம் 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 763 வழக்குகளுக்கு அபராத தொகை ரூ.3,81,500 வசூலிக்கப்பட்டது.

இந்த தணிக்கை மேலும் தொடரும் என்றும், இது சம்பந்தமாக அனைத்து வாகன ஓட்டிகளும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in