மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா?- தமிழிசை கண்டனம்

மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா?- தமிழிசை கண்டனம்
Updated on
1 min read

மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடும் மக்கள் மீது நேரடி தாக்குதல் நடத்துவது என்ன நியாயம்? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுக்கடைகளை மூடச்சொல்லி தமிழகம் முழுவதும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை அடக்கி, ஒடுக்க காவல் துறையினர் பெண்கள், வயதானவர்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக தடியால் தாக்குவது கண்டிக்கத்தக்கது.

படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொன்ன உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய அரசு, மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடும் மக்கள் மீது நேரடி தாக்குதல் நடத்துவது என்ன நியாயம்?.

மக்கள் விரும்பாத இடங்களில் உள்ள மதுக்கடைகளை அரசு உடனே மூட வேண்டும். மதுவுக்கு எதிராக தமிழக பெண்களின் போராட்டத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சொல்ல பெண்களை திரட்டி வரும் ஜூன் 16-ம் தேதி எனது தலைமையில் கோட்டை நோக்கி பேரணியாக செல்ல உள்ளோம்'' என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in