Last Updated : 30 Jan, 2023 11:31 PM

 

Published : 30 Jan 2023 11:31 PM
Last Updated : 30 Jan 2023 11:31 PM

பணி நியமன முறைகேடு | சேலம் பெரியார் பல்கலை.யில் அரசு நியமித்த குழு விசாரணை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனங்களில் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு நியமித்த குழுவினர் நேற்று முதற்கட்டமாக ஆவணங்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனம், முறைகேடாக பணியில் சேர்ந்தது குறித்து தமிழ்நாடு அரசு நியமித்த விசாரணை குழுவினர் நேற்று முதல்கட்டமாக ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனம் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்தது குறித்து புகார் எழுந்தது. இதில், உடற்கல்வி இயக்குனர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாதது, பல்கலைக்கழக நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் இட ஒதுக்கீடு ஆணைப்படி நியமிக்காதது, தமிழ் துறை தலைவர் பெரியசாமி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள், பெரியசாமி கொடுத்த போலிச் சான்று, தகுதியின்மை குறித்து புகார் எழுந்தது.

மேலும், பெரியசாமியை காட்டிலும் பலரும் சீனியராக இருக்கும் நிலையில், இளையவரான இவரை விதிமுறைக்கு புறம்பாக ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்தது என 13 புகார்கள் கூறப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை வெளியட்டு இருந்தார்.

இதனையடுத்து, அரசு குழுவில் இடம் பெற்றுள்ள உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி, அரசு இணை செயலாளர் இளங்கோஹென்றி தாஸ் கொண்ட குழுவினர் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த குழுவினர் இரண்டு மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அரசு குழுவினருக்கு தேவையான வசதிகளை பெரியார் பல்கலைக்கழகம் செய்து கொடுத்துள்ளது. அதன்படி, அரசு குழுவினர் முதல்கட்டமாக ஆவணங்களை ஆய்வு செய்து வரும் நிலையில், இந்த விசாரணையானது வரும் இரண்டு நாட்களுக்கு நடக்கிறது. விசாரணை குழு அதிகாரிகள் அனைத்து கட்டத்திலும், அனைவரிடமும் விசாரணையில் ஈடுபடவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x