Published : 30 Jan 2023 02:30 PM
Last Updated : 30 Jan 2023 02:30 PM

கவுன்சிலர்களுக்கு ஊதியம் தொடர்பாக விரைவில் நல்ல செய்தி; தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாமன்ற கூட்டம்: மேயர் பிரியா தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் என்றும் கவுன்சிலர்களுக்கு ஊதியம் தொடர்பாக நல்ல செய்தி வரும் என்றும் மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (ஜன.30 ) சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் 24 வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சேட்டு பேசுகையில்," மக்களின் நேரடிக் குறைகளை சரி செய்யும் பணியில் ஈடுபடும் கவுன்சிலர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் போல ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் அமர்வுபடியாக 800 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது." என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த துணை மேயர் மகேஷ் குமார், "கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார். மேயர் பிரியா பேசுகையில், "அரசிடம் கோரிக்கை வைக்கப்ட்டுள்ளது. மிக விரைவில் நல்ல செய்தி வரும். இறுதிப்படுத்திவிட்டு நல்ல செய்தியை அறிவிக்கலாம் என்று இருக்கிறோம் என்று பதில் அளித்தார்.

இதைத் தவிர்த்து மதிமுக மாமன்ற உறுப்பினர் ஜீவன், "மாமன்ற கூட்டத்தை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும். ஒவ்வொரு வார்டு அலுவலகத்திலும் வார்டு உறுப்பினர் தேசியக்கொடி ஏற்றும் வகையில் கொடிக்கம்பம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்." என்று பேசினார். இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா,"அடுத்த மாதம் முதல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் தொடங்கும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x