சென்னை | விடுதி, லாட்ஜ்களில் போலீஸார் திடீர் சோதனை

சென்னை | விடுதி, லாட்ஜ்களில் போலீஸார் திடீர் சோதனை
Updated on
1 min read

சென்னை: சென்னையில் குற்றச் செயல்களை குறைக்கவும், தலைமறைவு ரவுடிகளை கைது செய்யவும், பழையகுற்றவாளிகளை கண்காணிக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதன்படி சிறப்பு வாகனத் தணிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது. கொலை,கொள்ளை உட்பட குற்றச் செயல்களில் ஈடுபடும் எண்ணத்துடன் யாரேனும் பதுங்கி உள்ளார்களா? ஆயுதங்கள், போதைப் பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய லாட்ஜ், மேன்ஷன்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டது.

சென்னையில் 439 லாட்ஜ்கள் மற்றும் 119 மேன்ஷன்கள் என மொத்தம் 558 தங்கும் விடுதிகளில் போலீஸார் இரவு நேரத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதுமட்டும் அல்லாமல் முக்கியசாலை சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து சிறப்பு வாகனத் தணிக்கையும் நடத்தப்பட்டது.

இதில் மொத்தம் 8,429 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 106 வாகனங்கள், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத 166 வாகனங்கள் என மொத்தம் 272 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், முக அடையாளத்தைக் கொண்டு குற்ற நபர்களைஅடையாளம் காணும் (FRS) கேமரா மூலம் 3,665 நபர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in