2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணி 82% நிறைவு

மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் சென்னையில் துரிதமாக நடந்து வரும் நிலையில், பரங்கிமலை - சிறுசேரி வழித்தடத்தில் மடிப்பாக்கம் பகுதியில் ஏராளமான ராட்சத தூண்கள் விரைந்து நிறுவப்பட்டுள்ளன. படம்: எம்.முத்துகணேஷ்
மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் சென்னையில் துரிதமாக நடந்து வரும் நிலையில், பரங்கிமலை - சிறுசேரி வழித்தடத்தில் மடிப்பாக்கம் பகுதியில் ஏராளமான ராட்சத தூண்கள் விரைந்து நிறுவப்பட்டுள்ளன. படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, 82 சதவீதம் நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டப் பணிகளை வரும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, பூந்தமல்லி-பவர் ஹவுஸ்இடையிலான வழித்தடத்தை 3 ஆண்டுகளுக்குள் முடித்து, ரயிலை இயக்குவதற்கான நடவடிக்கைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது. இதுபோல, சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிலம்கையகப்படுத்தும் பணியும் தீவிரமாகநடைபெற்று வருகிறது. இதுவரை 82%நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 2-ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 112.72ஹெக்டேர் நிலம் தேவை. இவற்றில் 93ஹெக்டேர் நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளான காளியம்மன் கோயில் தெரு, வடபழனி, ஆற்காடு சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். ஒப்பந்ததாரர்கள் கட்டுமானப் பணிக்காக, திட்ட இடத்தை கையகப்படுத்த விரும்புவதால், விரைவில் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

முதல்கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களின் அளவு 220 மீட்டராக இருந்தது. இது2-ம் கட்டத்தில் 150 மீட்டராக குறைக்கப்பட்டது. இதேபோல, முதல்கட்டத்தில் உள்ள நிலையங்களில் 4 நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் இருக்கின்றன. 2-ம் கட்டத்தில் இரண்டு நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் மட்டுமே கொண்டிருக்கும். முடிந்தவரை தனியார் நிலத்தை கையகப்படுத்தாமல் இருக்கத் திட்டமிட்டு பல முயற்சிகளை எடுத்தோம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே, தனியார் நிலத்தைப் பயன்படுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in