Published : 25 Dec 2016 10:47 AM
Last Updated : 25 Dec 2016 10:47 AM

காஞ்சிபுரம் அருகே போலீஸ் நிலைய தலைமை காவலர் மீது தாக்குதல்: பிரபல தாதாவின் கூட்டாளி கைது

காஞ்சிபுரம் அருகே போலீஸாரை தாக்கிய சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தாதாவின் கூட்டாளி ஒருவரை போலீஸார் நேற்று கைது செய் தனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலன்(48). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக கொலை, ஆள்கடத்தல், நில அபகரிப்பு போன்ற வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளன. இவர் தற்போது தலைமறைவாக இருந்தாலும் அவ்வப்போது தனது ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் பெயரில் இவரது அடியாட்கள் சிலர் காஞ்சிபுரத்தில் வியாபாரிகளையும், ஜவுளி உரிமையாளர்களையும் மிரட்டி பணம் வசூலிப்பது, நிலத்தை குறைவான தொகை கொடுத்து மிரட்டி எழுதி வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு உள் ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள பெருநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி செய்பவர் பாபா(46). இவர் நேற்று முன்தினம் இரவு பெருநகரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்தார். செவிலிமேடு அருகே வரும்போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஸ்ரீதர் தனபாலனின் முக்கிய கூட்டாளி யான காஞ்சிபுரம், தாயார் குளம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (21) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தமக்கு வேண்டப்பட்ட ஒருவர் மீது தலைமைக் காவலர் பாபா வழக்குப் பதிவு செய்ததால் அவரைத் தாக்கியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் அவருடன் சேர்ந்து தாக்குதல் நடத்திய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

போலீஸ் மீதே தாக்குதல் நடத்தும் அளவுக்கு தியாகராஜன் நடந்து கொண்ட விவகாரத்தில் அவர் சொல்வது உண்மையான காரணம்தானா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x