Published : 30 Dec 2016 12:21 PM
Last Updated : 30 Dec 2016 12:21 PM

ஜெ. மரணம் தொடர்பான முழுமையான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்: ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவரது மரணம் தொடர்பான முழுமையான மருத்துவ அறிக்கையையும் தமிழக அரசு வெளியிட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவரது மரணம் தொடர்பான முழுமையான மருத்துவ அறிக்கையையும் எந்தத்தரப்பிலிருந்தும், எவ்வித சந்தேகமும் எழாத வகையில் அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் முதல்வர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள நினைப்பது பொதுமக்களின் உரிமையுமாகும். அதனால் தான் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி இருந்தேன்.

தமிழகத்தில் உள்ள பிற கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும், ஊடகத்துறையில் சிலரும், நடுநிலையாளர்களும் மறைந்த முதல்வரின் சிகிச்சைக்கும் உயிர்ப் பாதுகாப்பிற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிமுகவினர் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பலத்த சந்தேகங்களையும், மர்மங்களையும் களைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு சிறிதும் அக்கறை செலுத்தாத நிலையில், அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய மரணத்தில் மர்மங்களுக்கும், பலத்த சந்தேகங்களுக்கும் இடம் இருப்பதாக, ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த விடுமுறைக் கால நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில், நீதிபதி வைத்தியநாதன் அவர்கள், ஜெயலலிதா மரணத்தில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு இருப்பதுடன், சிகிச்சையில் இருந்த முதல்வரை நேரில் பார்க்க, உறவினர்கள் யாரையும் மருத்துவமனையில் ஏன் அனுமதிக்கவில்லை, மக்களின் அபிமானம் பெற்ற தலைவர்களின் மரணம் தொடர்பாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் மரணம் குறித்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நடைமுறைகளை மேற்கோள் காட்டி, ஜெயலலிதாவின் மரணத்தில் அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், ஜெயலலிதா உடல்நிலை குறித்து முழுத் தகவலை ஏன் வெளியிடவில்லை? மத்திய அரசு ஏன் வாயே திறக்கவில்லை? எனக் கேள்விகள் எழுப்பியிருப்பதுடன், தானே இந்த மனுவைத் தொடர்ந்து விசாரிக்கும் வாய்ப்பு அமைந்திருந்தால், புதைக்கப்பட்ட உடலைத்தோண்டி எடுத்து உடல் கூறாய்வு நடத்த உத்தரவிடுவேன் எனத் தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளிலும், ஊடங்களிலும் வரும் செய்தியை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அத்தகைய ஒரு நிலைக்கு இடம்தராமல் அ.தி.மு.க. அரசு முழுமையான தகவல்களை வெளியிட வேண்டியது கட்டாயமாகும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அரசுத் தரப்பிலிருந்து எந்த ஓர் அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அவர் மரணமடைந்த அதிகாரப்பூர்வத் தகவலைக் கூட மருத்துவமனை நிர்வாகம் தான் முதலில் வெளியிட்டது. அதன் பிறகே, தலைமைச் செயலாளரிடமிருந்து அறிக்கை வந்தது.

மூடுமந்திரமான இத்தகைய செயல்பாடுகள் தான் மறைந்த முதலமைச்சர் குறித்த மர்மங்களுக்கும், பலத்த சந்தேகங்களுக்கும் மக்கள் மத்தியில் இடமளித்துள்ளது. மருத்துவமனையில் அம்மையார் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றது தொடர்பான படங்களை வெளியிட வேண்டும் எனத் தலைவர் கலைஞர் அவர்கள் கோரிக்கை விடுத்த போது, அதனை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், உண்மை நிலையை ஆளுந்தரப்பினர் விளக்கியிருந்தால் இன்று பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றிருக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்காது.

இப்போதும்கூட காலந்தாழ்த்தாமல் முழுமையான மருத்துவ அறிக்கைகள், சிகிச்சை முறைகள், மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ-புகைப்பபட ஆவணங்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியது ஆளுந்தரப்பின் கடமையாகும்.

அதுமட்டுமின்றி, மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் சிகிச்சை அளித்ததால், அது குறித்த விவரங்களை வெளியிட வேண்டிய கடமை மத்திய அரசுக்கும் உள்ளது.

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இது குறித்து அளித்துள்ள உறுதி காப்பாற்றப்படும் என எதிர்பார்க்கிறேன். முன்னாள் முதல்வரின் மரணம் குறித்து உயர் நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் நீதிபதியைக் கொண்டு முழுஅளவில் விசாரணை நடைபெற்று முழு உண்மைகளையும் மக்களுக்கு வெகு விரைவாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் அதேநேரத்தில், மக்களின் பக்கம் நின்று உண்மைகளை உரைக்க வேண்டிய கடமை ஊடகத்துறை நண்பர்களுக்கும் உள்ளதை அன்புடன் நினைவூட்ட விரும்புகிறேன்.

முதல்வரையும் மற்ற அமைச்சர்களையும் சந்தித்து பேட்டி எடுக்கும் நண்பர்கள் தயக்கமின்றி, மறைந்த முதலமைச்சரின் உடல்நிலை குறித்து மக்கள் எழுப்பும் பலத்த சந்தேகங்களையும், மர்மங்களையும், உயர்நீதிமன்ற நீதிபதி கேட்டுள்ள கேள்விகளையும் தெரிவித்து, பதில்களைப் பெற்று வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x