Last Updated : 23 Dec, 2016 01:51 PM

 

Published : 23 Dec 2016 01:51 PM
Last Updated : 23 Dec 2016 01:51 PM

பேருந்து, ரயில் நிலையங்களில் ஸ்வைப் மெஷின் கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டாஸ்மாக் கடைகள் உள்பட பொது மக்கள் கூடும் இடங்களில் ஸ்வைப் மெஷின் வைக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த பி.ராம்குமார் ஆதித்யன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்ததையடுத்து நாடு முழுவதும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

புதிதாக ரூ.2000 நோட்டுகள் மட்டுமே தற்போது அதிகளவில் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்படுகிறது. புதிய ரூ.500 நோட்டுகள் இன்னும் போதிய அளவில் வெளியிடப்படவில்லை.

இதனால் சில்லறை அளிக்க முடியாமல் வியாபாரிகளும், சில்லறை இல்லாமல் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தபால் நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பல இடங்களிலும் சில்லறை தட்டுப்பாடால் பொதுமக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வங்கி மற்றும் ஏடிஎம்களில் போதிய பணம் இருப்பில் இல்லை.

பணமிருக்கும் ஒரு சில வங்கி மற்றும் ஏடிஎம்கள் முன்பாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையும், அதனால் நோயாளிகள் மற்றும் முதியோர் பலர் உயிரிழப்பதும் நடைபெற்று வருகிறது.

எனவே, இப்பிரச்சனைகளை சரிசெய்ய கல்வி நிறுவனங்கள், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள், பெட்ரோல் நிலையங்கள், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள், தபால் நிலையங்கள், எரிவாயு நிலையங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், நெடுஞ்சாலை டோல் கட்டண மையங்கள், மின் கட்டண மையங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், அரசு போக்குவரத்து கழக பஸ் டிக்கெட் முன்பதிவு மையம், அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள், கருவூலங்கள், அனைத்து இரு சக்கர, நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள், ரேசன் கடைகள், கோயில் தரிசன கவுண்டர், டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள், தங்கும் விடுதி, சினிமா தியேட்டர்கள், டிராவல் ஏஜென்சி, முத்திரை தாள் விற்பனை அலுவலகங்கள், நெடுஞ்சாலை ஓட்டல்கள், மருந்து கடைகள், ஹார்டுவேர், மின் சாதான கடைகள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து பொது இடங்களில் ஸ்வைப் மெஷின் வைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x