Published : 29 Jan 2023 10:11 PM
Last Updated : 29 Jan 2023 10:11 PM

209 கிராம உதவியாளர்கள் பணிக்கு தகுதியானவர்களே நியமனம்: சிபாரிசுக்கு இடம்கொடுக்காத மதுரை ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

ஆட்சியர் அனீஸ் சேகர்

மதுரை: மதுரை மாவட்ட வருவாய் துறையில் தலையாரிகள் (கிராம உதவியாளர்கள்) பணி நியமனம் தேர்வில் ஆளும்கட்சி சிபாரிசுகள், தலையீடுகளுக்கு இடம் கொடுக்காமல் ஆட்சியர் அனீஸ் சேகர், நேர்மையாக தேர்வு நடத்தி, பணியாளர்களை தேர்வு செய்த பட்டியல் வெளியாகி உள்ளது.

அவரின் இந்த நேர்மையான நடவடிக்கையை கண்டு எந்த சிபாரிசுக்கும் போகாத, நேர்மையாக தேர்வில் கலந்து கொண்டு தேர்வானவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வருவாய் துறையில் தமிழகம் முழுவதும் ‘தலையாரிகள் (கிராம உதவியாளர்கள்) காலிப்பணியிடங்களை நிரப்ப, அதற்கான பணியாளர்கள் தேர்வை அரசு நடத்தியது. மதுரை மாவட்டத்தில் 209 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. எழுத்துத்தேர்வு முடிந்த நிலையில் கடந்த டிசம்பர் 25ம் தேதி முதல் கடந்த ஜனவரி 10ம் தேதி வரை 11 தாலுகா அலுவலங்களில் எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடந்தது.

இந்த பணியிடங்களில் ஆளும்கட்சியினர் வழக்கம்போல் தங்கள் கட்சிக்காரர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் தாங்கள் பரிந்துரை செய்தவர்களை நியமிக்க முயற்சி செய்தனர். ஆளும்கட்சியினர் சிபாரிசு, தலையீடு இந்த பணிநியமனத்தில் அதிகமாக இருந்ததால் ஆட்சியர் அனீஸ் சேகர், இந்த தேர்வையும், அதற்கான நேர்முகத்தேர்வையும் நேரடியாக கண்காணித்து நடத்தினார். இந்த தேர்வை நேர்மையாக நடத்தி இட ஒதுக்கீடு மற்றும் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முடிவெடுத்தார்.

அதற்கு ஆளும்கட்சி தரப்பில் இருந்து பல்வேறு முட்டுக்கட்டைகள், அழுத்தங்கள் வந்தது. ஆனாலும், அதை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு நேர்மையான முறையில் கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு 209 பேரை ஆட்சியர் அனீஸ் சேகர் நியமித்துள்ளார்.

அந்த தேர்வு பட்டியல் வெளியானது. இந்த பட்டியலில் எந்த சிபாரிசுக்கும் செல்லாதவர்கள், யாரிடமும் பணம் வழங்காதவர்கள், நேர்மையான தேர்வுகளில் கலந்து கொண்டவர்கள் தேர்வாகியுள்ளனர். அதனால், இந்த பட்டியலில் இடம் பெற்று இன்ப அதிர்ச்சியடைந்தவர்கள், ஆட்சியருக்கும், அதிகாரிகளுக்கம் தங்கள் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகிறார்கள்.

பொதுமக்களும், ஆட்சியரின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். இதுகுறித்து வருவாய் துறை அலுவலர்கள் சிலர் கூறுகையில், ‘‘பொதுவாக அரசு துறைகளில் கீழ்நிலை பணியார்கள் தேர்வில் ஆளும்கட்சியினர் வழங்கும் சிபாரிசு பட்டியல் அடிப்படையில் அதிகாரிகள் பணியாளர்களை கண்ணை மூடிக்கொண்டு நியமனம் செய்து விடுவார்கள். ஒரு சில நேர்மையான அதிகாரிகள், 50:50 என்ற அடிப்படையில் நியமனம் செய்வார்கள். அதன் அடிப்படையிலே மதுரை மாவட்ட வருவாய் துறையில் கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு வருவாய் துறை அதிகாரிகள் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக அவர்கள் பரிந்துரைக்கு நபர்களை தேர்வு செய்ய தயாராகினர்.

இந்த விவரத்தை தெரிந்த ஆட்சியர் அனீஸ் சேகர், வருவாய்துறை அதிகாரிகளிடம் முறைகேடாக யாரையும் பணிநிமனம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், யாரையாவது முறைகேடுக்கு துணைப் போனால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். அதிகாரிகள் ஆளும்கட்சி தரப்பினர் நெருக்கடியை சமாளிப்பதா? ஆட்சியர் உத்தரவுக்கு பணிவதா? எனத் தெரியாமல் தவித்த நிலையில் ஆட்சியர் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்து மிக நேர்மையான பணியார்கள் பட்டியலை தேர்வு செய்துள்ளனர்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x