

ஒரு விளையாட்டு வீரர் விபத்தில் நிரந்தர ஊனமடைவது மரணத்தைவிட கொடுமையானது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அந்த இளம் வீரருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த எம்.பிரேம்குமார், கடந்த 2008 ஜூன் 3-ம் தேதி அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் சிக்கி வலது காலை இழந்தார். அப்போது அவர் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். நிரந்தர ஊனத்தால் இழப்பீடு கோரி அவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பவானி மோட்டார் வாகன வழக்குகளுக்கான தீர்ப்பாயம் ரூ.3.49 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேம்குமார் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மனுதாரர் பிரேம்குமார், சிறந்த விளையாட்டு வீரராக இருந்துள் ளார். 18 வயதில் 70-க்கும் மேற்பட்ட பதக்கச் சான்றிதழ்களை அவர் பெற்றுள்ளார். தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் அவர் பெற்றுள்ள சான்றிதழ்களே அவர் சிறந்த விளையாட்டு வீரர் என்பதற்கு சாட்சி.
விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அவர் வேலை வாய்ப்பை பெற்றிருக்க முடியும். மேலும் போலீஸ் துறையில் பெரிய அதிகாரியாக வேண்டுமென்ற அவரது கனவு இந்த விபத்தால் கலைந்துள்ளது. ஒரு விளை யாட்டு வீரர் விபத்தால் நிரந்தர ஊனமடைவது என்பது மரணத்தை விட கொடுமையானது. இதை கீழ் நீதிமன்றம் கவனத்தில் கொள் ளாமல் இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்துள்ளது.
இழப்பீடு இவ்வளவுதான் வழங்க வேண்டும் என்ற எந்த வொரு உச்சபட்ச அளவும் தீர்ப் பாயத்துக்கு இல்லை. எனவே, மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகை ரூ.3.49 லட்சத்தை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிடுகிறேன். இந்த தொகையில் ரூ.10 லட்சத்தை தனது மருத்துவ செலவுகளுக்காக அவர் உடனே எடுத்துக்கொள்ளலாம். எஞ்சிய ரூ.20 லட்சத்தை அவரது கணக்கில் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்த எதிர்மனு தாரர்களுக்கு உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.