Published : 28 Jan 2023 04:31 PM
Last Updated : 28 Jan 2023 04:31 PM

நேரில் நலம் விசாரித்த மா.சுப்பிரமணியன்: மருத்துவமனையில் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை வைத்த நல்லக்கண்ணு

நல்லக்கண்ணுவிடம் நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று தன்னை நலம் விசாரிக்க நேரில் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் நல்லகண்ணு கோரிக்கை வைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்பதால் அங்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற அமைச்சரிடம் நல்லகண்ணு கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் கூட்டுறவுத் துறை அமைச்சர் மனைவியின் தாயார் கன்னியாகுமரிக்கு யாத்திரைக்காக வந்த நிலையில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலம் பெற்று இன்று (ஜன.28) சொந்த மாநிலத்திற்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது, மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இவரையும் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உ.பி அமைச்சரிடம் போனில் தொடல்பு கொண்டு இரண்டு தினங்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிக்க, அதற்கு உ.பி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

பின்னர், சீர்காழியை சேர்ந்த அபிநயா என்ற சிறுமிக்கு அறியவகை மரபணு நோய் பாதிப்பு காரணமாக 2 கால்களும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்கவில்லை என்பதால் முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். அதனால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரையும் அமைச்சர் சந்தித்து நலம் விசாரித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் அளித்த பேட்டியில், "கால்களை இழக்காமல் மீண்டும் நடக்க முடிவதாக சிறுமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 1 மாதத்திற்கு பிறகு ரூ.1 லட்சம் மதிப்பிலான காலணி வாங்கி பொறுத்தப்பட உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்பதால் அங்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என நல்லகண்ணு கோரிக்கை வைத்தார். ஏற்கெனவே மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x