கும்பகோணம்: இடமாற்றம் செய்த பேராசிரியர் மீண்டும் கல்லூரியில் பணிக்கு வந்ததை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் இடமாற்றம் செய்த பேராசிரியர் மீண்டும் கல்லூரியில் பணிக்கு வந்ததைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி பிரதான வாயிலில் புவியியல் துறை மாணவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புவியியல் துறை உதவிப் பேராசிரியர் சி.வடிவேல், ஒருமையில் பேசியதாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, கல்லூரி கல்வி இயக்குநர், அவரை திருச்சி, பெரியார் ஈ.வே.ரா. அரசு கலைக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், அவர் 27-ம் தேதி, மீண்டும் இக்கல்லூரிக்கு பணியிடம் மாற்றம் பெற்றுக்கொண்டு, பணிக்கு வந்ததையறிந்த புவியியல் துறை எம்எஸ்சி முதலாமாண்டு படிக்கும் மாணவர் கார்த்தி தலைமையில், 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியின் பிரதான வாயிலில், சாதி வெறி பிடித்த வடிவேலுவை, அனுமதிக்கமாட்டோம், அவரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, தரையில் அமர்ந்து கையில் பதாதைகளுடன் கண்டன முழக்கமிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் பி.மகேஸ்குமார் மற்றும் போலீஸார், ‘போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், ஆர்ப்பாட்டம் செய்வதால், கல்வி பாதிக்கப்படும். எனவே, உங்களது கோரிக்கையை புகாராக வழங்குங்கள், அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இது குறித்து கல்லூரி முதல்வர் என்.தனராஜன் கூறும்போது, ‘போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம், அரசு ஆணையின்படி பணிக்கு வந்துள்ளார். அவர் மீது குற்றம் நிரூபிக்காததால், அவருக்கு இங்கு பணி வழங்கியுள்ளனர் என கூறியதையடுத்து, மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in