

சென்னை: 'தமிழ்நாடு'ன்னு கூட எழுதத் தெரியாதவர்களிடம் மாட்டிக் கொண்டு தமிழ்நாடு தவிப்பதாக திமுக ஐ.டி.விங்கின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 74-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் நேற்று (ஜன.26) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில், ராணுவ அணிவகுப்பு நடைபெறும் கடமை பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியேற்றிவைத்தார். அப்போது 21 பீரங்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர், ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள், மத்திய அரசுத் துறைகளின் 6 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இந்த அலங்கார ஊர்தியில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த அலங்கார ஊர்திக்கு வாக்களிக்கலாம் என்று மத்திய அரசின் https://www.mygov.in/group-poll/vote-your-favorite-tableau-republic-day-2023/ என்ற வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வலைதள பக்கத்தில் Tamil nadu என்பதற்கு பதிலாக Tamil naidu என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுகவின் ஐடி விங் ட்விட்டர் பக்கத்தில்," 'தமிழ்நாடு'ன்னு கூட எழுதத் தெரியாத தற்குறிகளிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறது Tamilnadu. தமிழ்நாடு அரசின் 'குடியரசு தின அலங்கார ஊர்தி'க்கு வாக்களிக்கவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.