Published : 27 Jan 2023 06:41 PM
Last Updated : 27 Jan 2023 06:41 PM

திருப்பூரில் தமிழக தொழிலாளரை வடமாநில தொழிலாளர்கள் தாக்கிய சம்பவம்: போலீஸ் சொல்வது என்ன?

வட மாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள்.

திருப்பூர்: திருப்பூரில் தமிழக பின்னலாடை தொழிலாளரை வடமாநிலத் தொழிலாளர்கள் துரத்தி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள திருப்பூர் போலீஸார், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே திலகர் நகரில் வடமாநில தொழிலாளர்கள், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளரை தாக்கும் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதியில் தமிழகத் தொழிலாளர்கள், தந்தை பெரியர் திராவிடர் கழகத்தினர், கட்டிங் தொழிலாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான அமைப்பினர் அங்கு திரண்டனர். அப்போது வடமாநிலத் தொழிலாளர்களைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனிடையே, அங்கு வந்த 15 வேலம்பாளையம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்தவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து தமிழகத் தொழிலாளர் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அங்கும் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாநகரக் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, “திருப்பூர் மாநகரில் உள்ள ரியா பேஷன்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் நபர், கடந்த 14-ம் தேதி மாலை நேர தேநீர் இடைவேளையின்போது, அருகில் உள்ள கடைக்கு சென்று தேநீர் அருந்தி உள்ளார். அப்போது அங்கு அமர்ந்திருந்த 2 நபர்களுக்கு இடையே, புகைப்பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நிறுவனத்தில் பணி செய்யும் நபரை தாக்க முற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு வேலை செய்யும் நபர், தனது நண்பர்களை அழைத்து வந்து இருதரப்பு வாக்குவாதமாக மாறி உள்ளது. இது தொடர்பாக முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் தகவல் தவறாக பகிரப்பட்டு வருகிறது” என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

நடந்தது என்ன? - திருப்பூர் மாநகருக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், ஆத்துப்பளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு ஒடிசா, ஜார்க்கண்ட், பிஹார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலம்பாளையம் சாலை திலகர் நகரிலுள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர், தமிழக தொழிலாளி ஒருவரை விரட்டி பெல்ட், கட்டை, சாலையில் கிடக்கும் கல் உள்ளிட்டவற்றால் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x