Published : 27 Jan 2023 06:57 AM
Last Updated : 27 Jan 2023 06:57 AM

கோயில் அறங்காவலர் நியமன விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கோயில் அறங்காவலர் நியமனவிண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டு விட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை முறையாக நியமனம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில்அறங்காவலர் நியமன விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்தகேள்வி சேர்க்கப்பட்டு விட்டதாகவும், இதுதொடர்பாக நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட் டது. மேலும் அறங்காவலர் பணிக்கான விண்ணப்பங்களை இணையதளங்களில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும், இந்த நடைமுறையை முடிக்க போதிய அவகாசம் வழங்கப்படும் என்றும், 10 மாவட்டங்களில் தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து எஞ்சிய 29 மாவட்டங்களிலும் விரைவில் இதற்கானகுழுக்கள் அமைக்க அறநிலையத்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பங்களை பிப்.8-ம் தேதிக்குள் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை பிப்.8-க்கு தள்ளி வைத்துள்ளனர். அறங்காவலர் பணிக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் வெளியிடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x