

சென்னை: வேங்கைவயல் சம்பவத்தைப் பற்றி எதிர்க்கட்சியினர் பேசவில்லை, யாருக்கு அச்சப்படுகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி சென்னை அசோக் நகரில் உள்ளவிசிக தலைமையகத்தில் அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வேங்கைவயல் பிரச்சினை குறித்து இதுவரை பாஜக வாய்திறக்கவில்லை, ஆறுதல் சொல்லக்கூட தயாராக இல்லை. பாதிப்புக்கு உள்ளானவர்கள் இந்துக்கள்தான். ஆனாலும், அமைதி காக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய யாரும் வேங்கைவயல் பற்றி பேசவில்லை. யாருக்கு அச்சப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. மனிதாபிமானம் இருக்கிறதா, இல்லையா என்று ஐயப்படக்கூடிய வகையில் இருக்கிறது.
வேங்கைவயல் விவகாரத்தில் இரண்டு முறை போராட்டம் நடத்தி இருக்கிறோம். சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்திருக்கிறோம். சிபிசிஐடி விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் உறுதிஅளித்துள்ளார். ஒரு மாதம் ஆகியும் யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பட்டியல் சமூகத்தை சார்ந்த ராம்நாத் கோவிந்த், பழங்குடி சமூகத்தை சார்ந்த திரவுபதி முர்முஆகியோரை குடியரசுத் தலைவராக அமர வைத்தோம் என்றுபாஜகவினர் பெருமை பேசுகிறார்கள்.
ஆனால், நாடு முழுவதும் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 10 சதவீதம் பேர்கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடான ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.