

தஞ்சாவூர்: தமிழ்நாடு காவல் கடலோர பாதுகாப்பு பிரிவு சார்பில் மீனவ இளைஞர்களுக்கு வழங்கிய தனித்திறன் பயிற்சி பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இந்திய கடற்படைக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு கடலோர காவல் படை அதிகாரிகள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு கடலோர பாதுகாப்பு காவல் பிரிவு சார்பில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான தனித்திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடலூர், கமுதி, கன்னியாகுமரி ஆகிய மூன்று இடங்களிலும் 90 நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 120 இளைஞர்கள் பங்கேற்று தனித்திறன் பயிற்சிகளை பெற்றனர்.
இவர்களுக்கு தங்குமிடம், பயிற்சி, உணவு, உடைகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. மேலும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த திருவத்தேவன் அண்ணா நகரை சேர்ந்த முத்துப்பாண்டி(21) என்ற இளைஞர் அக்னி வீரர்கள் பிரிவின் கீழ் இந்திய கடற்படைக்கு தற்போது தேர்வாகியுள்ளார்.
இந்திய கடற்படைக்குத் தேர்வாகியுள்ள இளைஞர் முத்துப்பாண்டிக்கு தமிழக கடலோர காவல் படை பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் பயிற்சி வழங்கிய அதிகாரிகள் பாராட்டினர். பயிற்சி வழங்கிய அதிகாரிகளுக்கும், இதற்கு ஏற்பாடு செய்த தமிழக காவல்துறைக்கும், முதல்வருக்கும், முத்துப்பாண்டி தனது நன்றியை தெரிவித்துள்ளார். தற்போது முத்துப்பாண்டி சிலிக்கானில் நடைபெறும் இந்திய கடற்படையின் பயிற்சியில் உள்ளார்.