Published : 26 Jan 2023 01:49 PM
Last Updated : 26 Jan 2023 01:49 PM

2 நாட்களில் 16 ஆயிரம் வாகனங்கள் மீது நடவடிக்கை | எந்த அளவில் நம்பர் பிளேட்: காவல்துறை விளக்கம்  

காவல் துறையினர் சோதனை | கோப்புப் படம்

சென்னை: விதிகளுக்கு மாறாக வித விதமான டிசைன்களில் நம்பர் பிளேட் இருந்த 16 ஆயிரம் வாகனங்கள் மீது சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மோட்டார் வாகனச் சட்டம், விதிகள் 50 மற்றும் 51-ன்படி வாகனங்களுக்கான பதிவு எண் தகடுகளின் அளவையும் வாகனப் பதிவுக் கடிதங்களையும் பரிந்துரை செய்கிறது. மேலும் இவ்விதிகளின்படி, வாகன எண் பலகைகளில் கலை அல்லது படங்களைப் பயன்படுத்துவதற்கு எந்த வித ஆடம்பரமான எழுத்துக்களும் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், பல வாகனங்கள் தங்கள் வாகனங்களில் தவறான வாகன எண் பலகைகளை பயன்படுத்தியுள்ளன.

எனவே, வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் சிறப்பு வாகனத் தணிக்கை செய்யப்பட்டது. இச்சிறப்பு வாகன சோதனையின்படி, ஒவ்வொரு போக்குவரத்துக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூன்று இடங்களை தேர்வு செய்து முறையான பதிவு எண் இல்லாத வாகனங்களை கண்டறிய தீவிர வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது.

இச்சிறப்பு வாகனத் தணிக்கையில் 16,107 வாகனங்களில் சரியான பதிவு எண்கள் இல்லாத வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்கூரிய வாகனங்களில் அதன் சரியான வாகன எண்களை பொருத்துவதற்கு அறிவுரை வழங்கி 15,962 வாகன எண்களுக்கு முறையான பதிவு எண்களை பொருத்தப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு அதன் தன்மையை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி எந்தவொரு வாகனங்களுக்கும் மோட்டார் வாகன வழக்குப் பதிவு செய்யாமல் அறிவுறுத்தி எச்சரித்து அனுப்பப்பட்டன.

மேலும் மோசமான வாகனப் பதிவு எண் கொண்ட 145 வாகனங்களை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு, அத்தகைய வாகனங்கள் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதா என்றும், அல்லது வேறு இடத்தில் திருடப்பட்டு எவரேனும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என குற்றப்பிரிவு மூலம் சரிபார்க்கப்பட்டு பின்பு விடுவிக்க தயார் நிலையில் உள்ளது.

இதுபோன்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தொடர்ந்து வாகன தணிக்கை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை தவறாமல் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x