

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒசஅள்ளியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாத அரசு அதிகாரிகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி, கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் வியாழக்கிழமை (ஜன.26) நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒசஅள்ளி ஊராட்சியில் புதுப்பட்டியில் நடந்த கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் புதுப்பட்டி, ஒசஅள்ளி, வேடியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராம மக்களின் பிரச்சினைகளை கேட்டறியவும்,அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அதிகாரிகள் கிராமசபைக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
ஆனால் ஒசஅள்ளியில் நடந்த கூட்டத்தில் ஒரு சில அரசு அலுவலர்களைத் தவிர பெரும்பாலான துறைகளின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அரசு அதிகாரிகளுக்கு ஊராட்சி சார்பில் தகவல் தெரிவித்தும் அரசு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளாத நிலையில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் எப்படி நிறைவேற்றப்படும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
எனவே சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்காத துறை அலுவலர்களை கண்டித்து முதல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் தலைவரை வற்புறுத்தினர், இதன்பேரில் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாத அரசு துறை அதிகாரிகளை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.