Published : 26 Jan 2023 08:18 AM
Last Updated : 26 Jan 2023 08:18 AM

74வது குடியரசு தின விழா: சென்னையில் தேசியக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 

தேசியக் கொடியேற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னை: 74வது குடியரசு தின விழாவை ஒட்டி காலை 8 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றினார். அவர் கொடியேற்றியவுடன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்று விழா நடைபெறுகிறது.

விழாவிற்கு முதலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவிற்கு வருகை தந்தார். ஆளுநருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஆளுநர் உரை: முன்னதாக நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில் "நாட்டுக்காக உயிர் தியாக செய்த தீரமிக்க வீரர்களை நாம் இன்று நன்றியுடன் நினைவுகூர்வோம். நமது ராணுவத்திற்கு நன்றி செலுத்துவோம். காலத்தை வென்ற அரசியலமைப்பு வழங்கிய அம்பேத்கருக்கு நன்றி தெரிவிப்போம். ருக்மணி லட்சுமிபதி குயிலி அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவோம். வஉசி, பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்துவோம். வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது.

இந்திய பெருமைகளில் ஒன்றாக தமிழ் மொழி திகழ்கிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. இலங்கை தமிழர் நலனுக்காக மத்திய அரசு உதவுகிறது. அங்கு வசிக்கும் தமிழர்களுக்காக வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் நலனுக்காக தமிழக அரசும் உதவுகிறது.வாழ்க தமிழ்நாடு. வாழ்க பாரதம்" என்று குறிப்பிட்டார்.

தேநீர் விருந்துக்கு அழைப்பு: இன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழக முதல்வருக்கு ஆளுநர் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x