

இரு அதிகார மையங்கள் இருந்தால் மாநில முன்னேற்றம் பாதிக்கும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.
புதுச்சேரியில் பாஜக சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா நேற்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலர் எச். ராஜா பங்கேற்று மத்திய அரசின் திட்டமான பெண்குழந்தைகளைக் காப்பது மற்றும் கல்வி போதிப்பது தொடர்பாக ஓவியப்போட்டியை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கவுதமி எழுதியுள்ள கடிதம் தொடர்பாக நான் கருத்து கூறவிரும்பவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு துக்கம் அனுசரிக்கும் போது சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை. கருத்து சொல்ல விரும்பவில்லை.
பிரதமர் மோடி அனைத்து மாநிலத்துக்கும் முன்னேற்றம் கொடுத்து வருகிறார்கள். எம்ஜிஆரை விட புகழ் பெற்றவர் ஜெயலலிதாதான். எம்ஜிஆர் காலத்தில் அவர் 35 சதவீத வாக்குகளைதான் பெற்றார். ஆனால், ஜெயலலிதா தலைமையில் அதிமுக 44 சதவீத வாக்குகளைப் பெற்றது. மக்களால் நேசிக்கப்பட்டவர், ஜெயலலிதா மறைவையடுத்து அவருக்கு மரியாதை செலுத்துவது மரபு. அதுதான் மத்திய அரசு செய்துள்ளது.
மத்தியில் பெரும்பான்மையுடன் பாஜகவும், தமிழகத்தில் பெரும்பான்மையுடன் அதிமுகவும் உள்ளபோது, பின்னால் இருந்து தமிழகத்தில் பாஜக இயங்க என்ன தேவையுள்ளது? மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு மற்றும் மாநில மக்களின் வளர்ச்சி பற்றிதான் எங்கள் கவலையுள்ளது. அரசியல் அதிகாரத்தை யார் பின்னால் நின்று பெற வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.
அதிமுகவில் யாரை கட்சித்தலைமை பொறுப்புக்கு நியமிப்பது என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். முதல்வர், கட்சித்தலைமை என இரு அதிகார மையம் இருந்தால் சரியாக இருக்காது. இரு அதிகார மையங்கள் இருந்தால் மாநில முன்னேற்றம் பாதிக்கும் என்று குறிப்பிட்டார்.