

சென்னை: குற்றவழக்கு பின்னணி கொண்ட வேட்பாளர்கள், அவர்கள் மீதானவழக்கு விவரங்களை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடுவது, வெளியிடும் முறை ஆகியவை குறித்து தேர்தல் ஆணையம் புதிய அறிவுறுத்தல்கள் மற்றும் படிவங்களை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கிணங்க, இந்திய தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும், குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள வேட்பாளர்கள், தண்டனை பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அந்த வேட்பாளர்களை கொண்டுள்ள அரசியல் கட்சிகள்,பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை ஏற்கெனவே வழங்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது அந்தவேட்பாளர்களின் குற்ற வழக்குகள் தொடர்பான தகவல்களை பத்திரிகை, ஊடகங்களில் வெளியிடுவதற்கான படிவங்களை தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது.
அதன்படி, செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை வெளியிட படிவம் சி-1, அரசியல் கட்சிகள் வெளியிட படிவம் சி-2, தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலக பயன்பாட்டுக்காக படிவம் சி-3, வேட்பாளர்கள், குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியீடு செய்தது தொடர்பான அறிக்கையினை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அளிக்க படிவம் சி-4 ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
மேலும், அரசியல் கட்சியினர்,குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியீடு செய்தது தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளிக்க படிவம் சி-5, தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகபயன்பாட்டுக்கு படிவம் சி-6, குற்றவழக்குகள் குறித்த உறுதிமொழியை செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் கட்சியின்வலைதளங்களில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அல்லது வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்து 2 வாரங்களுக்கு முன்பாக, இவற்றில் எது முதன்மையானதோ அதன்படி வெளியிடுவது தொடர்பாக படிவம் சி-7 ஐ பயன்படுத்த வேண்டும்.
குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியை வெளியீடு செய்தது தொடர்பான அரசியல் கட்சியின் அறிக்கையை வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து 72 மணி நேரத்துக்குள் அல்லது வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டதற்கு 2 வாரத்துக்கு முன்பாக, இவற்றில் எது முந்தையதோ, அதன்படி அறிக்கை அளிக்கவேண்டும். படிவம் சிஏ என்பதுதேர்தல் நடத்தும் அதிகாரியின்அலுவலக பயன்பாட்டுக்கான தாகும்.
வேட்பாளர்கள் தங்களது குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். குற்றவழக்குகள் உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள் மேற்படி வேட்பாளர்களின் குற்றவழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் மற்றும் தங்களது அரசியல் கட்சியின் வலைதளங்களிலும் உரிய படிவங்களில் விளம்பரம் செய்தல் வேண்டும்.
மேற்படி விளம்பரங்கள் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாளுக்கு மறுநாள் முதல் வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு வரை 3 முறை வெவ்வேறு நாட்களில் வெளியிடப்பட வேண்டும்.
மேலும், இதுகுறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முழுமையான அறிவுரைகள், பதிப்பு வாரியாக தமிழ் மற்றும் ஆங்கிலசெய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளின் பட்டியலையும் www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.