Last Updated : 24 Jan, 2023 10:57 PM

7  

Published : 24 Jan 2023 10:57 PM
Last Updated : 24 Jan 2023 10:57 PM

திராவிட மாடல் | ஆங்கிலம் ஏன்... தமிழில் பயன்படுத்தலாமே? - உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: ‘தற்போது திராவிட மாடல் என்கிறார்கள். அதில் மாடல் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் வார்த்தை என்ன? அதை ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்த வேண்டும். முழுமையாக தமிழில் பயன்படுத்தலாமே’ என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், தனியார் வணிக வளாகங்கள், கடைகள், தொழிற்சாலைகளில் தூய தமிழில் பெயர் பலகை வைக்கவேண்டும் என தமிழக அரசு 1982-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை அமல்படுத்த தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற அரசாணை முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘‘அரசு அலுவலகங்களில் பெயர் பலகை அரசாணை அடிப்படையில் தமிழில் வைக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் அரசாணை அடிப்படையில் தமிழ், ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்படுவதில்லை. அரசாணையை பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், "தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் உண்மையாகவும், கடுமையாகவும் உழைக்க வேண்டும். சட்டக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பாடப்புத்தகங்கள் தமிழில் வழங்க வேண்டும். தற்போது திராவிட மாடல் என்கிறார்கள். அதில் மாடல் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் வார்த்தை என்ன? அதை ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்த வேண்டும். முழுமையாக தமிழில் பயன்படுத்தலாமே" என்றனர்.

பின்னர் நீதிபதிகள், "அரசாணை அடிப்படையில் தமிழ், ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகை வைக்கும் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப். 16க்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x