Published : 24 Jan 2023 03:36 PM
Last Updated : 24 Jan 2023 03:36 PM

தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் | கோப்புப்படம்

புதுடெல்லி: டிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணை ஆவணங்களை சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிடிவி தினகரன் இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டிப்பர் இன்வெஸ்மெண்ட் மூலமாக டெபாசிட் செய்ததாகவும், மேலும் அந்த வங்கியில் முறைகேடான முறையில் அந்த பணம் வைப்புத் தொகை வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து கடந்த 1996-ம் ஆண்டு அமலாக்கதுறை டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை தனக்கு வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், டிடிவி தினகரன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆவணங்களை வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது அமலாக்கத் துறை சார்பில், இத்தகைய ஆவணங்களை மனுதாரருக்கு வழங்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத் துறையின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், முதலில் வழக்கு தொடர்பான ஆவணங்களில் உள்ள விஷயங்கள் எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். எனவே இந்தவழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை சீலிடப்பட்ட உறையில், மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x