Published : 08 Dec 2016 08:08 AM
Last Updated : 08 Dec 2016 08:08 AM

21 டன் தாது மணல் கடத்திய லாரி பறிமுதல்: கனிமவளத் துறை அதிகாரிகள் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு 21 தாது மணல் கடத்திச் சென்ற லாரியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கனிமவளத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுவதைத் தடுக்க போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சூளகிரி வட்டாட்சியர் ஜே.சி.முருகன் தலைமையிலான வருவாய்த் துறையினர் கொல்லப்பள்ளி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அவ்வழியே வந்த லாரியை நிறுத்தியபோது, லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடினார். லாரியை சோதனை செய்தபோது அதில் தாது மணல் இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த கனிமவளத் துறை அதிகாரிகள், தாது மணல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து கனிமவளத் துறை அதிகாரிகள் கூறும்போது, “தென் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமத் தொழில் நிறுவனத்துக்குச் சொந்தமான லாரி என தெரியவந்தது.

அதில் சுமார் 21 டன் தாது மணல், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ஸ்டீல் கம்பெனிக்கு கொண்டுசெல்ல முயன்றுள்ளனர். அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட தாதுமணல், லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x