Published : 01 Dec 2016 09:09 AM
Last Updated : 01 Dec 2016 09:09 AM

சம்பா சாகுபடி பாதிப்பால் அதிர்ச்சி?- 3 விவசாயிகள் உயிரிழப்பு

திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்ட அதிர்ச்சியில் அவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் கொராடாச்சேரியை அடுத்த முசிறியத்தைச் சேர்ந்தவர் சேகர்(52) இவர் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்திலும், குத்தகைக்கு எடுத்த ஒரு ஏக்கர் நிலத்திலும் சம்பா சாகுபடி செய்திருந்தார். ஆனால், போதிய தண்ணீர் இல்லாததால், சம்பா பயிர்கள் கருகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சேகர் கடந்த 24-ம் தேதி விஷம் அருந்தியுள்ளார். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந் தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். விவசாயி தற்கொலை தொடர்பாக கொரடாச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருக் களாரைச் சேர்ந்தவர் நடராஜன்(75). இவர் 5 ஏக்கரில் நேரடி விதைப்பு செய்திருந்தார். தண்ணீர் இன்றி பயிர் கருகியதால் நேற்று முன் தினம் அதிர்ச்சியில் மரண மடைந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

பயிர்கள் கருகியதால்..

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து(67). இவருக்கு 6 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார். தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகிவிட்டன.

இந்நிலையில், இவரது பக்கத்து வயல்காரரும், நண்பருமான ராஜகுமாரன் என்பவர் கடந்த 28-ம் தேதி பயிர்கள் காய்ந்த வேதனையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு, நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பிய மாரிமுத்து, பயிர்கள் கருகியது குறித்து புலம்பிக்கொண்டு இருந்துள்ளார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x