Published : 23 Jan 2023 07:25 PM
Last Updated : 23 Jan 2023 07:25 PM

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த புதிய சட்டம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கால அவகாசம்

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த ஏதுவாக 1914-ம் ஆண்டு சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று 3 மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரியும், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, பழமையான 1914ம் ஆண்டு சட்டப்படி தேர்தல் நடத்தப்படுவதால், சட்டத்தில் மூன்று மாதங்களில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, அதுவரை தேர்தலை தள்ளி வைக்கவும், மின்னணு முறையில் தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "பழமையான இந்த சட்டப்படி தான் இதுவரை தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக மனுவில் எந்த கோரிக்கையும் எழுப்பப்படாத நிலையில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது.மேலும் நூறு ஆண்டுகளாக வாக்குச்சீட்டு முறையில் எந்த குளறுபடிகளும் இல்லாமல்தான் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது" என்று கோரப்பட்டிருந்தது. இதேபோல் தற்போதைய நிர்வாகிகள் சார்பிலும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சட்டத்தில் முழுமையாக திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து ஜனவரி 23-ம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் மேல்முறையீட்டு வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், 1914-ம் ஆண்டு சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் எனவும், இதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார்.

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், புதிய சட்டத்தை இறுதி செய்ய அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். அதுவரை தற்போதைய நிர்வாகிகளே பதவிகளில் நீடிக்கவும் அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x