

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவிதமான வருமான வரம்பும் இல்லாமல் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தபட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, கலைஞர் நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மையக் கட்டிடத்தை (Centre of Excellence for Rehabilitation) வரும் 28-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், அதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் இன்று (ஜன. 23) ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலைஞர் நகர் பகுதியில் Center of excellence என்று சொல்லக்கூடிய வகையிலான புணர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மையம் ரூ.28.40 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதி உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் பயன்படுத்தி கொள்வதற்கும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருக்கின்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் சேர்த்து ரூ.11.43 கோடி மதிப்பீட்டில் உபகரணங்களும் வாங்கப்பட்டு இருக்கிறது.
மொத்தம் ரூ.39.83 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் என்கின்ற வகையில் பணிகள் நிறைவு பெற்று இருக்கிறது. நிறைவு பெற்ற இப்பணிகளை மக்களுக்கு அர்ப்பணிக்கின்ற வகையிலும் இக்கட்டிடத்தை திறந்து வைக்கிற வகையிலும் வருகின்ற 28 காலை 10 மணிக்கு முதல்வர் வருகை தந்து திறந்து வைக்க உள்ளார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை மாற்றுத் திறனாளிகளுக்கு என்று இருக்கின்ற துறை கடந்த காலங்களில், குறிப்பாக அதிமுக ஆட்சிக் காலங்களில் சமூகநலத் துறை வசம் மட்டுமே அத்துறை செயல்பாட்டில் இருக்கும். கருணாநிதி முதல்வராக இருக்கின்றபொழுது அத்துறையை முதல்வரே தன்னகத்தே வைத்துக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமான உதவிகள் செய்வதை அவர் வாழ்நாள் கடமையாகவே கொண்டிருந்தார்.
அவர் வழியில் இன்றைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளுக்கான துறையை தன்னகத்தே வைத்துக் கொண்டு ஏராளமான புதிய பணிகளை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மாற்றுத் திறனாளிகளின் புதிய பயனாளர்களை அடையாளம் காணுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அவயங்களை செய்து தருவதற்கு பல்வேறு பணிகளை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் ஏறத்தாழ 1.5 கோடி நெருங்கும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவர்கின்ற வகையிலான திட்டமாக காப்பீட்டுத் திட்டம் இருந்துக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவிதமான வருமான வரம்பும் இல்லாமல் அவர்களை காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கும் பணியினை முதல்வர் தொடங்கி வைத்து அவர்களுக்கு அடையாள அட்டையினை தருகிறார்.
மாற்றுத் திறனாளிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட அட்டைப் பெற்றுக் கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வருமான வரம்பு போன்ற எந்தவிதமான விதிமுறைகளும் பொருந்தாது என்கின்ற வகையில் முதல்வர் அட்டையினை தரவிருக்கிறார்கள். அதேபோன்று செயற்கை அவயங்கள் கை, கால் போன்ற செயற்கை அவயங்களை தரும்பொழுது அவர்களுக்கு என்று ஒரு குறைந்தபட்ச கட்டணத்தை அரசு வசூலித்துக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்ச கட்டணத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் முழுமையாகவே கட்டணமில்லாமல் உபகரணங்களை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார்கள்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.