உச்ச நீதிமன்ற தீர்ப்பு பழனிசாமிக்கு சாதகமாக அமையும்: செங்கோட்டையன் நம்பிக்கை
ஈரோடு: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பழனிசாமிக்கு சாதகமாக அமையும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக, அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு பழனிசாமிக்கு சாதகமாகவே அமையும். தேர்தல் ஆணையம் மூலம் இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும். கட்சியின் பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்படுவார். எனவே, தொண்டர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம்.
இருபெரும் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு, சிறந்த முறையில் கட்சியையும், ஆட்சியையும் பழனிசாமி வழிநடத்திச் சென்றுள்ளார். மக்கள் எளிதில் சந்திக்கக் கூடிய முதல்வராக பழனிசாமி இருந்தார். தேசிய அளவில் தமிழகத்தை முதல் மாநிலமாக பழனிசாமி மாற்றினார் என்றார்.
