

காஞ்சிபுரம்: சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம்,பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் அமைய இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் சந்தித்து நேற்று கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைய இருப்பதாக, இதுவரை எந்த ஒரு அரசாணையும், உத்தரவும் இல்லாமல் இருக்கும் நிலையில், தனி நாடு இருப்பது போல பொதுமக்கள் இருக்கும் பகுதி சுற்றி போலீஸார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதி மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ விடாமல் நெருக்கடியை ஏற்படுத்திய, தமிழக அரசின் செயல் ஏற்புடையதல்ல. சுற்றியுள்ள காவல் தடுப்பை அகற்ற வேண்டும்.
திமுக அளித்த 505 வாக்குறுதிகளில், 43-வது வாக்குறுதி விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்பதாகும். ஆனால்,திமுக அரசு ஏதாவது சலுகைகளை அளித்து, திட்டத்தை நிறைவேற்றினால் போதும் என்ற அணுகுமுறையில் செயல்படுவதாக செய்திகள் வருகிறது.
இந்த அணுகுமுறை ஏற்க கூடியது அல்ல. போராடும் கிராம மக்களுக்கு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும். இவ்வாறு தெரிவித்தார்.