

ராமேசுவரம்: தமிழகம் முழுவதும் இரட்டை குவளை முறை, இரட்டை சுடுகாடு போன்ற சாதி கொடுமைகள் தொடர்கின்றன என்று திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
தியாகி இமானுவேல் பேரவையின் பொதுச் செயலாளரும், ஐந்திணை மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஆலோசகருமான பூ.சந்திர போஸ் (67) சனிக்கிழமை மாரடைப்பால் காலமானார். பரமக்குடி வசந்தம் நகரில் உள்ள அவரது வீட்டில் சந்திரபோஸ் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மனிதக் கழிவை கலந்தவர்களை விரைவில் அரசு கைது செய்யும் என நம்புகிறோம். தமிழகத்தில் இரட்டை குவளை முறை, இரட்டை சுடுகாடு போன்ற சாதி கொடுமைகள் தொடர்கின்றன.
இவற்றை முழுமையாகக் கண்டறிய விசாரணை ஆணையம் ஒன்றை அரசு அமைக்க வேண்டும். இவற்றை முழுவதும் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.