Published : 21 Jan 2023 07:17 AM
Last Updated : 21 Jan 2023 07:17 AM
சென்னை: சாலை உள்கட்டமைப்பு வசதிகள், செலவு போன்ற காரணங்களால் நூறு சதவீதம் தாழ்தளப் பேருந்துகளை இயக்குவது என்பது சாத்தியமற்றது என உயர் நீதிமன்றத்தில் அரசுப் போக்குவரத்துக்கழகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,107 பேருந்துகளை புதிதாக கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டது. பேருந்துகளை புதிதாக கொள்முதல் செய்யும்போது, பெங்களூரு போன்ற பிற நகரங்களில் இருப்பதுபோல மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் தாழ்தளப் பேருந்துகளாக கொள்முதல் செய்ய உத்தரவிடவேண்டும் எனக்கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை கடந்தமுறை விசாரித்த உயர் நீதிமன்ற பொறுப்புதலைமை நீதிபதி அமர்வு, புதிதாக கொள்முதல் செய்யப்படும் நூறுசதவீத பேருந்துகளையும் தாழ்தளப் பேருந்துகளாக கொள்முதல் செய்வதில் என்ன பிரச்சினைகள் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ‘தமிழகத்தில் நூறு சதவீதம் தாழ்தளப் பேருந்துகளை இயக்க வேண்டுமெனில் அதற்குரிய வகையில் பேருந்து நிறுத்தங்களையும், சாலை உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.
தாழ்தளப் பேருந்துகளை இயக்கினால் மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் பேருந்துக்குள் புகுந்துவிடும். அத்துடன் ஒரு தாழ்தளப் பேருந்தின் விலை ரூ.80 லட்சம் எனும்போது, அதை ஒரு கி.மீ. தூரத்துக்கு இயக்க ரூ. 41 செலவாகும். ஆனால், சாதாரண பேருந்துகளை கொள்முதல் செய்யும்போது இதில் பாதி மட்டுமே செலவாகும். அத்துடன் தாழ்தளப் பேருந்துகளை அன்றாடம் முறையாக பராமரிக்க தனி வசதிகள் தேவை. இந்த காரணங்களால் நூறு சதவீதம் தாழ்தளப் பேருந்துகளை இயக்குவது என்பது சாத்தியமற்றது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதிகள், பேருந்துகளின் பின்புறம் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி, இறங்கும் வகையில் பிரத்யேக சாய்தளப்பாதைகள் அமைக்க முடியுமா என்பது போன்ற மாற்று வழிகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT