சாலை விபத்தில் உயிரிழந்த திருநங்கையின் கண்கள் தானம்

சாலை விபத்தில் உயிரிழந்த திருநங்கையின் கண்கள் தானம்
Updated on
1 min read

சாலை விபத்தில் உயிரிழந்த 21 வயது திருநங்கையின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

மதுரை செல்லூரைச் சேர்ந்த வர் கல்லானை, இவரது மனைவி கல்யாணி. இவர்களின் மகன் சதீஷ்(21). இவர் திருநங்கையாக மாறி ஆர்த்தி எனப் பெயரை மாற்றிக்கொண்டார். தேனி, ரத்னா நகரில் திருநங்கைகளுடன் வசித்து வந்தார்.

ஆர்த்தியும், மற்றொரு திருநங்கை ரியாயும் தேனி அன்னஞ்சி விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் நவ.22-ம் தேதி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது அரசு பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரியா உயிரிழந் தார். பலத்த காயங்களுடன் உயி ருக்கு போராடிய ஆர்த்தி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ஆர்த்தி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது இரு கண்களை தானமாக வழங்குவது தொடர்பாக, அவரது பெற்றோருடன் பாரதி கண்ணம்மா அறக்கட்டளை தலைவர் திருநங்கை பாரதி கண்ணம்மாவும், சர்வ மத வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துக்குமாரும் பேசினர்.

முதலில் கண்களை தானம் செய்வதற்கு ஆர்த்தியின் பெற்றோர் மறுத்தனர். பின்னர் அவரது கண்களால் இருவர் பார்வை பெற முடியும். இதனால் ஆர்த்தி இறந்த பின்னரும் வாழ்வார் எனப் பெற்றோரிடம் எடுத்துக் கூறப்பட்டதையடுத்து கண் தானம் செய்ய ஆர்த்தியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்து அரசு மருத்துவமனைக்கு உறுதி மொழி கடிதம் கொடுத்தனர். இதையடுத்து ஆர்த்தியின் இரு கண்களையும் மருத்துவக் குழுவினர் எடுத்து பத்திரப்படுத்தினர்.

இதுகுறித்து பாரதி கண்ணம்மா கூறியதாவது:

இந்தியாவில் திருநங்கை ஒருவரின் கண்கள் தானம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் ஆர்த்தி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். இறந்தாலும் தனது கண்கள் மூலம் ஆர்த்தி உயிர் வாழ்வார் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in