Last Updated : 20 Jan, 2023 11:09 PM

 

Published : 20 Jan 2023 11:09 PM
Last Updated : 20 Jan 2023 11:09 PM

பழங்குடியின மக்கள் வெளியே வந்து நல்ல பண்பாட்டை வளர்த்து, தங்களை உயர்த்தி கொள்ள வேண்டும் - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: பழங்குடியின மக்கள் வெளியே வந்து மற்றவர்களுடன் பழகி நல்ல பண்பாட்டை வளர்த்து தங்களை உயர்த்தி கொள்ள வேண்டுமெனபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி நேரு யுவகேந்திரா சார்பில் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் தெய்வசிகாமணி வரவேற்றார். புதுச்சேரி அமைச்சர் லட்சுமிநாராயணன், நேரு யுவகேந்திரா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: ‘‘பழங்குடியின மக்கள் அடர்ந்த காடுகள், மலைகள் என நாம் செல்ல முடியாத பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டியது அரசின் கடமை. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து வரும் பழங்குடியின இளையோர் மற்ற மாநிலத்தின் கலாசாரம், பண்பாட்டை தெரிந்து கொள்ள முடியும். பழங்குடியின மக்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் தனித்து வாழ்வதுதான்.

இன்று எத்தனையோ வளர்ச்சிகள், தொழில்நுட்பங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் அறிந்து கொள்கின்ற வாய்ப்பு பழங்குடியின மக்களுக்கு இல்லாமல் இருப்பது பெரிய குறையாக உள்ளது. இன்றைய நிலையில்கூட பழங்குடியின மக்கள் வெளியே வராமல் இருப்பதையும், அவர்கள் வாழ்கின்ற இடங்கள் நமக்கும் தெரியாமல் இருப்பதை கூட பார்க்கலாம். இப்படிப்பட்ட நிலையில் உள்ள அவர்கள் வெளியே வர வேண்டும். பழங்குடியின மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைய வேண்டும். இதற்கு கல்வி மிகவும் அவசியம். இந்த கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

இன்றைய பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர்கள் வெளியே வந்து பிற இனத்தை சேர்ந்த மக்களோடு வாழ்ந்து அவர்களது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை உணர்ந்து அதற்கேற்ப தங்களை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பாக இந்த இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் கூட பழங்குடியின மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கையை முன்னேற்றம் அடைய செய்ய அரசு பல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இலவச மனைப் பட்டா வழங்கி கல் வீடு கட்டுவதற்கு அரசு மானியம் வழங்கி உள்ளது. அதேபோன்று, கல்வி கிடைப்பதற்கான வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள பழங்குடியின மக்கள் வெளியே வந்து மற்றவர்களுடன் பழக வேண்டும். நல்ல கல்வியை பெற்று வளர்ச்சி அடைய வேண்டும். உங்களுக்கான வீடுகளை நீங்களே கட்டி கொள்ள வேண்டும். அதற்கு அரசு நிதியுதவி செய்யும். அதேபோல், எங்கெல்லாம் பழங்குடியின மக்கள் வசிக்கிறார்களோ, அவர்களெல்லாம் வெளியே வந்து தங்களை தாங்களே தயார்படுத்திக் கொள்ளும் வகையில் முயற்சி செய்து கொள்ள வேண்டும். நம்மால் முடியாதது ஒன்றும் கிடையாது.

எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் நீங்கள் வெளியே வந்து மற்றவர்களுடன் பழகி நல்ல பண்பாட்டை வளர்த்து, உங்களை நீங்களே உயர்த்தி கொள்ள வேண்டும். அதற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.’’ இவ்வாறு ரங்கசாமி தெரிவித்தார். வருகின்ற 25-ம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரேதசம், ஒடிசா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த190 பழங்குடியின இளையோர் பங்கேற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x