டாஸ்மாக் கடைகள் அரை மணி நேரம் முன்பாக அடைக்கப்படுமா? - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே அடைப்பது குறித்து விளக்கம் அளிக்க அரசுத் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், "டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. இந்நிலையில், கடை மூடப்படும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடைகளின் முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றம். எனவே டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் அடைக்கப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவுக்கு டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் திறக்கும் மற்றும் அடை்க்கும் நேரம் என்பது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு. எனவே அதில் தலையிட முடியாது. மேலும், பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது அரசின் பரிசீலனையில் இருக்கிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரத்துக்கு முன்பே அடைப்பது குறித்து அரசின் கருத்தை அறிந்து கூறும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in