Published : 20 Jan 2023 08:46 AM
Last Updated : 20 Jan 2023 08:46 AM

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட சம்மதம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தொகுதியில் கூட்டணிக் கட்சியான அதிமுக போட்டியிட சம்மதிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தொகுதியில் த.மா.கா வேட்பாளராக எம்.யுவராஜா அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். ஈரோடு கிழக்கு சடமன்றத் தொகுதியில் அனைத்துதரப்பு மக்களும் வசிக்கிறார்கள்.
தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மீறி, எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம்.

தொடர்ந்து அத்தொகுதியில், கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று 19.01.2023 வியாழக்கிழமை காலை, அ.இ.அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்கள்.

அப்போது இந்த இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் த.மா.கா வின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன்.மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டது.

தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட த.மா.கா வின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றி கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும், கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் யுவராஜா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "கூட்டணியில் வலுவாக இருக்கும் கட்சி ஒரு கோரிக்கை வைக்கும்போது அதை பரிசீலித்து விட்டுக்கொடுபதில் தவறில்லை. இதில் தேவையற்ற ஈகோ பார்ப்பதால் எந்த பலனும் இல்லை. திமுக என்ற பொது எதிரியை எதிர்கொள்ள எடுக்கப்படும் முடிவை ஏற்போம். கட்சித் தலைவர் எல்லாவற்றையும் பரிசீலித்து இந்த முடிவை ஏற்கிறேன் " என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x