தனியார் நிறுவன பால் லிட்டருக்கு ரூ.2 உயர்வு

தனியார் நிறுவன பால் லிட்டருக்கு ரூ.2 உயர்வு

Published on

சென்னை: தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. பால், தயிர் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன பாலுக்கும், தனியார் பாலுக்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால், கடைகளில் ஆவின் பாலுக்கு தேவை அதிகமாக உள்ளது. ஆனாலும், தனியார் நிறுவன பால் விலை கடந்த ஆண்டு 4 முறை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், சில தனியார்பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. ஒரு நிறுவனம் நேற்றே விலையை உயர்த்தியது. 4 தனியார் நிறுவனங்களில் பால் விலை உயர்வு இன்று (ஜன.20) முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து தனியார் பால் நிறுவனங்கள், பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளன. பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால், பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. இது போல, தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது. தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு அந்த சங்கத்தினர் எழுதியுள்ள கடிதத்தில் ‘‘தனியார் பால் நிறுவனம் தன்னிச்சையாக விலை உயர்த்துவதைதடுக்க வேண்டும். பால் கொள் முதல், விற்பனை விலையை அரசு நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in