Published : 20 Jan 2023 07:26 AM
Last Updated : 20 Jan 2023 07:26 AM

புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் லட்சுமி விஸ்வநாதன் சென்னையில் காலமானார்

சென்னை: புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் லட்சுமி விஸ்வநாதன் சென்னை யில் நேற்று காலமானார். புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் லட்சுமி விஸ்வநாதன் (78). இவர் நடன குரு, எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் என பன்முகத் திறன் கொண்டவர். இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக அவரது சகோதரியும் கர்நாடக இசைப் பாடகருமான சாருமதி ராமச்சந்திரனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.

பிரபல திரைப்பட இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் சகோதரர் கே.விஸ்வநாதன் - அலமேலு தம்பதியருக்கு 1944-ம் ஆண்டு ஜன.27-ம் தேதி லட்சுமி விஸ்வநாதன் பிறந்தார். இவரது 7-வது வயதில் மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரத நாட்டியம் உள்ளிட்டவை தொடர்பாக 4 நூல்களை எழுதியுள்ளார்.

தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது, இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட தேசிய சங்கீத நாடக அகாடமி விருது, கிருஷ்ண கான சபா வழங்கிய நிருத்ய சாருமதி விருது, சென்னை மியூசிக் அகாடமி வழங்கிய நிருத்ய கலாநிதி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவர் குறித்து சென்னை மியூசிக் அகாடமி தலைவர் என். முரளி கூறும்போது, ‘‘லட்சுமி விஸ்வநாதனின் நடனம் மிகவும் ஆழமான மற்றும் நுட்பமானதாக, அழகியல் நிறைந்த அறிவார்ந்த அணுகுமுறையை கொண்டிருந்தது. அவரை ஒரு நடனக் கலைஞரின் நடனக் கலைஞராக வர்ணிக்கலாம்.

அவர் சிறந்த எழுத்தாளராகவும், பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியவராகவும் திகழ்ந்தார். இவர் சென்னை மியூசிக் அகாடமியின் உறுப்பினராகவும் பின்னர் துணைத் தலைவராகவும் நீண்டகால தொடர்பைக் கொண்டிருந் தார். 2017-ம் ஆண்டுக்கான மியூசிக் அகாடமியின் நிருத்ய கலாநிதி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்’’ என்றார்.

பரதநாட்டிய குரு பத்மா சுப்ரமணியம் கூறும்போது, ‘‘லட்சுமி விஸ்வநாதன் மறைவு செய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மனவலியை ஏற்படுத்தியது. இது எனக்கு மட்டுமல்லாது பரதநாட்டிய உலகத்துக்கே ஏற் பட்ட பேரிழப்பாகும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x