Published : 20 Jan 2023 05:26 AM
Last Updated : 20 Jan 2023 05:26 AM

பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

மதுரை: கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: பழநி முருகன் கோயில் குடமுழுக்கு ஜன. 27-ல் நடைபெறுகிறது. முருகன் தமிழ் கடவுள். இதனால் குடமுழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓதப்பட வேண்டும். தமிழகத்தில் கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை 2020-ல் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு பழநி முருகன் கோயிலுக்கும் பொருந்தும். எனவே பழநி முருகன் கோயில் குட முழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓத உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு முன்புவிசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, தமிழ் கடவுள் முருகன். இதனால் தமிழில் குடமுழுக்கு நடத்துமாறு கேட்க வேண்டியதில்லை. பழநி முருகன் கோயிலில் குடமுழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓத அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பழநி முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரம் ஓதப்படுவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x