Published : 18 Jan 2023 06:15 AM
Last Updated : 18 Jan 2023 06:15 AM

பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக இன்று 2,605 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் நேற்றைய தினம் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்களின் வசதி கருதி இன்றைய தினமும் 2,605 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ஜன.13-ம் தேதியே பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கினர். அவர்களின் வசதி கருதி தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் அவர்கள் நெரிசலின்றி சொந்த ஊர்களுக்கு பயணமாகினர். அவ்வாறுசென்றவர்கள் ஊர் திரும்புவதற்கான சிறப்பு பேருந்துகளின் இயக்கமானது நேற்று முன்தினம் தொடங்கியது.

இதன் மூலம் நேற்றைய தினம் பெரும்பாலானோர் ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். சென்னையைப் பொருத்தவரை நேற்று அதிகாலை முதல் பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இவ்வாறு நேற்று காலை சென்னை திரும்பியவர்களின் வசதிக்காக கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதே நேரம், சுற்றுப்புற மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் நேற்றுமாலை நேரத்தில் சொந்த வாகனங்களில் சென்னை திரும்பத் தொடங்கினர். பேருந்துகளில் வந்திறங்கியவர்களின் வசதிக்காக முக்கிய பேருந்துநிலையங்களில் இருந்து 50 மாநகர பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.

காணும் பொங்கல் முடிந்து வருவோரின் வசதிக்காக நேற்றைய தினம் 3500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலமாகவும் ஆயிரக்கணக்கானோர் இன்று ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

இதேபோல் இன்றைய தினமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 1206 பேருந்துகள், சென்னையைத் தவிர்த்து இதர இடங்களுக்கு 1399 பேருந்துகள் என 2605 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு சென்னை வருவோரின் வசதிக்காக இன்றும் நாளையும் 125 மாநகர பேருந்துகளை கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x