Published : 15 Dec 2016 07:27 PM
Last Updated : 15 Dec 2016 07:27 PM
ராமநாதபுரம் ஐஸ் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ராமநாதபுரம் மாவட்டம், திருவாடாணை, நம்புதாளையில் தனியார் ஐஸ் தொழிற்சாலையில் கடந்த 13-ம் தேதி அமோனியம் குளோரைட் உருளையில் கசிவு ஏற்பட்டு வெடித்தது. இதில், தொழிற்சாலையில் பணியில் இருந்த மின் பணியாளர் கண்ணன் மற்றும் அருகில் கடைகளில் நின்று கொண்டிருந்த ஆறு பேர் மூச்சுத் திணறி மயக்கம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த பச்சைமுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் மயக்கமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்ப எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பச்சைமுத்துவின் குடும்பத்துக்கு ரூ. ஒருலட்சம், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்'' என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT