

சென்னை: காணும் பொங்கல் இன்று (ஜன.17) கொண்டாடப்படுவதால், அதிகளவில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாகச் சுற்றுலா தலங்களுக்கும், பல்வேறு இடங்களுக்கும் சென்று வருவது வழக்கம். இவ்வாறு செல்லும் மக்கள் பேருந்து போக்குவரத்தையே பெரும்பாலும் விரும்புவர்.
எனவே பேருந்து பயணிகளின் வசதிக்காகக் காணும் பொங்கலான இன்று அனைத்து மாநகரபோக்குவரத்துக் கழக பணியாளர்களும், பணிக்கு வந்து மாற்றுப் பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளையும் இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில் பணிமனையில் ஏற்கெனவே பெறப்பட்ட அதிகபட்ச வசூலைக் கணக்கில்கொண்டு, காணும் பொங்கலுக்கு வசூல் இலக்காக ரூ.2 கோடியே34 லட்சத்து 22,427 நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இந்த வசூல் தொகையை விட அதிக வசூலை ஈட்ட அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இச்சிறப்பு மாநகர பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அனைவருக்கும் மதிய உணவு செலவுக்காக நபர் ஒன்றுக்கு ரூ.50 வீதமும், ஓட்டுநர், நடத்துநர் பணிபுரியும் பேருந்தின் வழிச் செலவுத் தொகையில் ரூ.50 வீதம் எடுத்துக்கொள்ளவும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.