மறைவுக்கு பிறகும் காவிரி பிரச்சினையில் வெற்றி தேடித் தந்த ஜெயலலிதா: பழ.நெடுமாறன்

மறைவுக்கு பிறகும் காவிரி பிரச்சினையில் வெற்றி தேடித் தந்த ஜெயலலிதா: பழ.நெடுமாறன்

Published on

தனது மறைவுக்குப் பிறகும் காவிரிப் பிரச்சினையில் வெற்றித் தேடித் தந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை காவிரி விவசாயிகள் நன்றியோடு நினைவுகூர்வார்கள் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "காவிரி நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்புத் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 2000 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை வரவேற்கிறேன்.

தனது மறைவுக்குப் பிறகும் காவிரிப் பிரச்சினையில் வெற்றித் தேடித் தந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை காவிரி விவசாயிகள் நன்றியோடு நினைவுகூர்வார்கள்.

ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகம் பிடிவாதமாக மறுத்துவிட்ட காரணத்தினால் காவிரிப் பாசனப் பகுதியில் பயிர்கள் கருகி நாசமாகி விவசாயிகள் பெரும் இழப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

அவர்களுக்கு தகுந்த இழப்பீட்டை கர்நாடகம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்ச நீதிமன்றத்தில் எழுப்புமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in