Published : 16 Dec 2016 09:18 AM
Last Updated : 16 Dec 2016 09:18 AM

சசிக்குமார் கொலை வழக்கு: கோவையில் சிபிசிஐடி ஐஜி விசாரணை

இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் கொலை வழக்கு விசாரணை குறித்து கோவையில் சிபிசிஐடி ஐஜி மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு நடத்தினார்.

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் கடந்த செப்.22-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை துடியலூர் போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர், அந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. 8 ஆய்வாளர்கள் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையில் தொடர்புடையவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப் படும் நபர்கள் என 4 புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டனர். அவர்கள் குறித்த தகவல்கள் அளிக்க தொலைபேசி எண், இ-மெயில் முகவரி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இருப்பினும் கடந்த 3 மாதங்களாக இந்த வழக்கு எந்தவித முன்னேறமும் இன்றி காணப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிக்குமாரின் மனைவி யமுனா, வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமெனவும், சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டுமெனவும் மனு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கில் சிபிசிஐடி தனிப்படை போலீஸாரின் விசாரணை குறித்து நேற்று ஆய்வு நடைபெற்றது. சிபிசிஐடி ஐஜி மகேஷ்குமார் அகர்வால் இந்த ஆய்வை நடத்தினார். அதில் சிபிசிஐடி உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர். கோவை மாநகர காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சசிக்குமார் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகளை அவர் பார்வையிட்டார். வழக்கை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைகளை அவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x