Published : 12 Jan 2023 07:11 PM
Last Updated : 12 Jan 2023 07:11 PM

ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்

ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப்படம்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை (ஜன.13) டெல்லி செல்கிறார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

காலை 11.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்ல இருப்பதாகவும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆளுநர் டெல்லியில் இருப்பார் என்று ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவருடன் சந்திப்பா? - இந்த பயணத்தின்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது குடியரசுத் தலைவரை சந்திப்பாரா என்பது குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரங்கள், அதிகாரபூர்வமான தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் குடியரசுத் தலைவரை ஆளுநர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வியாழக்கிழமை (ஜன.12) சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, "குடியரசுத் தலைவரை நாங்கள் சந்தித்தோம். தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அவரிடம் வழங்கினார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 9-ஆம் தேதி, அவை மரபுகளை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டது பற்றி எடுத்துரைத்தோம்" என்று கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x