Published : 11 Jan 2023 06:50 AM
Last Updated : 11 Jan 2023 06:50 AM

தஞ்சாவூர் | ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை திருவையாறில் இன்று பஞ்சரத்ன கீர்த்தனை: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நடைபெறும் தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழாவில் இன்று (ஜன.11) பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்து இசையஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.

திருவையாறில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவை தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் ஜன.6-ம் தேதி மாலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நாள்தோறும் காலை 9 முதல் இரவு 10 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

விழாவின் நிறைவு நாளான இன்று (ஜன.11) இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி, ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளுக்கு இசையஞ்சலி செலுத்துகின்றனர். இந்த விழாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 7.45 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

இசையஞ்சலி: பின்னர், காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாகசுரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பின்னர், காலை 9 மணி முதல் 10 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடியும், இசைத்தும் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை யஞ்சலி செலுத்தவுள்ளனர். அப்போது, ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெறும்.

இதையடுத்து, இரவு 8 மணிக்குதியாகராஜர் சுவாமிகள் வீதியுலா நடைபெற உள்ளது. பின்னர், இரவு 10.30 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் விழாகுழுவினர் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x