

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதானவர்களில் 6 பேரை காவலில் எடுத்துள்ள என்ஐஏ அதிகாரிகள், கோவையில் உள்ள அலுவலகத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கோட்டைமேட்டில் கடந்த ஆண்டு அக்.23-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், காரை ஓட்டி வந்த அதே பகுதியைசேர்ந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி 11 பேரை கைது செய்தனர். இவர்களில் சிலரை கடந்த மாத இறுதியில் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதன் அடுத்த கட்டமாக, கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது தல்கா, ஷேக் இதாயத்துல்லா, முகமது ரியாஸ், முகமது நவாஸ், முகமது தவுபீக், சனோபர் அலி ஆகியோரை சில தினங்களுக்கு முன்னர் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 6 பேரையும் நேற்று அதிகாலை கோவைக்கு அழைத்து வந்தனர். அவிநாசி சாலை, போலீஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள தற்காலிக என்ஐஏ அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் உயிரிழந்த முபின், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனர் சத்தியமங்கலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குச் சென்று சதி ஆலோசனையில் ஈடுபட்டதை என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்திருந்தனர். அது தொடர்பாக இவர்களிடம் விசாரிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
தவிர, தொழில்நுட்ப ரீதியிலான ஆதாரங்களை திரட்ட, 6 பேரையும் கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கும், சதி திட்டம் தீட்டப்பட்ட சத்தியமங்கலம் வனப்பகுதிக்கும் அழைத்துச் சென்று ஆதாரங்களை திரட்டவும், விசாரணை நடத்தவும் என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.